
தமிழகத்தில் நேற்று காலை முதலே சீரான மழை பெய்து வருகிறது இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ காற்று வீசத் தொடங்கிவிட்டது எனவும் பொதுவாக அக்டோபர் 20ஆம் தேதி தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம்
ஆனால் இந்த முறை முன்னதாகவே பருவமழை ஆரம்பித்து விட்டது. அடுத்த 3 மாதங்களில் தோராயமாக சுமார் 44 செ.மீ மழைப்பொழிவு பதிவாகும். ஆனால் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை அதிகப்படியாக பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
இந்த மழை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கலாம். தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரண்டு நாட்களில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை,தாம்பரம், வண்டலூரில் நல்ல மழை பெய்து வருகிறது.