
பிரதமர் நரேந்திர மோடி “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பின்னர் மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.
மேலும் பிரதமர் “பிரதான் மந்திரி லாகு வியாபரிக் மந்தன் யோஜனா” மற்றும் “ஸ்வரோஜ்கர்” ஓய்வூதிய திட்டங்களையும் தொடங்குவார், இதன் கீழ் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பயனாளிகள் 60 வயதை முடித்த பின்னர் மாதத்திற்கு 3,000 ரூபாாய் பெறுவார்கள்.
இயற்கை சீற்றம், வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு ரூ. 3000 அளிக்கும் “சிறு—குறு விவசாயிகள் ஓய்வூதிய” திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆண்டுதோறும் ரூ. 6000 பெறும் விவசாயிகளும் இத்திட்டத்தில் இணையலாம். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பல நபர்களும் இத்திட்டத்தில் இணையலாம். பிரீீமியம் செலுத்தும் விவசாயி இறந்து விட்டால் நாமினி வாரிசுதாரரான அவருடைய மனைவி தவறாமல் பிரீமியம் செலுத்தி வந்தால் 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுவார்.
விவசாயி ஒருவர் மாதந்தோறும் குறைந்த பட்சம் 20 ஆண்டுவரை தவறாமல் பிரீமியம் செலுத்தி வந்தால் அறுபது வயதிற்கு பிறகு 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவார். வயதிற்கு ஏற்றார்போல் பிரீமியம் தொகை மாறும். 18 வயதானவர்கள் ரூ.55, 30 வயதானவர்கள் 150 ரூபாயும் செலுத்த வேண்டும். அதற்கு மேல், 40 வயது வரை உள்ளவர்கள் ரூ. 200 செலுத்த வேண்டும்.
எல்.ஐ.சி மூலமாகவோ அல்லது இ.சேவை மையத்தின் மூலமாகவோ பதிவு செய்யலாம்.