Categories: அரசியல்

இந்துத்துவ தேசியவாதம் பிரபலமானது எப்படி?

சமீபத்தில், 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து ராகுல் காந்தி பதவி விலகலாமா? வேண்டாமா? என்பது தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கும் போது, சிறுபான்மையினருக்கு எதிரான ஏராளமான வன்முறை சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) இவ்வளவு பெரும்பான்மையைப் பெற முடிந்தது எப்படி? என்பது தான் பொது சமூகத் தளத்தில் எழுந்துள்ள முதன்மை கேள்வி. இது காங்கிரஸ் என்ன தவறு செய்தது? என்ற கேள்வி எழ வழிவகுக்கிறது.

அதாவது, “தேசத்திற்கான ஒத்திசைவு கதையை உருவாகும் போது அது வெற்றி பெறுகிறது“. இதன் ஊடாக நாம் பாஜகவின் அரசியல் வெற்றியை உணர்ந்துகொள்ள முடியும். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் சரி, அதன் பிறகும் சரி எதிர்க்கட்சிகள் தேசியம் தொடர்பான கதைகளைக் கட்டமைக்கத் தவறிவிட்டன. ஆனாலும் பாஜகவின் இக்கதை உருவாக்கம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டது கிடையாது. பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்ட கதை வடிவத்தைத் தான் பாஜக “இந்தியத் தேசியம்” என்ற பெயரில் இங்கு உருவாக்கியுள்ளது.

1) உலகளாவிய கேள்விற்கான பதில்!

சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கு என்ன? என்பதை ஆராய்ந்து தற்போதைய சூழலில் பொருத்திப் பார்க்கும் போது, இங்கு பெரும்பான்மையினரின் அரசியல் எழுச்சியை நாம் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் பிரபல எழுத்தாளரான நீரா சந்தோக்.

தேசம் என்பது அதன் மக்களின் பெரும் கனவைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னை மறுவடிவமாக்கத் தொடர்ந்து செயல்பட வேண்டும். தற்போது, தேசத்திற்கான ஒத்திசைவு கதை எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும் போது நம்மைக் கடந்து போகும் “தேசியம்” என்ற கருத்தாடல் நமக்குக் கற்பிப்பது என்ன? என்பதைப் புரிந்து கொள்ளலாம். உலகமயமாக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு, நடுத்தர வர்க்க மக்களிடம் எழுந்த அதிருப்தியும், லட்சியமில்லாத உணர்வையும் நிவர்த்தி செய்யும் அளவிற்குக் கதையாடலை உருவாக்க வேண்டும் என்ற நிலை உருவானது. இதனை எந்த ஒரு கட்சியாலும் செய்திருக்க முடியும். ஆனால் இதனை இந்துத்துவ இயக்கங்கள் கச்சிதமாகச் செய்து முடித்தன. இதன் விளைவாகவே சிறுபான்மையினரை நோக்கிய தாக்குதல்கள் வெளிப்படையாகவே இந்தியாவை வீழ்ச்சி நிலைக்கு இழுத்துச் சென்றது.

பாஜக வெளிப்படையாகக் குற்றச்செயல்களில் ஈடுபடாத போதும், அது கட்டமைத்த கதையாடல் ஊடே இத்தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

2) காங்கிரசின் மறைமுகமும் பாஜகவின் நேரடியும்:

சங்பரிவார் அதுவரை கட்டி எழுப்பிய கதைகள் 2014ல் பெரும்பான்மையினரின் ஆதரவைத் திரட்டி தந்தது. “தொழில் சந்தையை எளிதாக்குவோம்” என்று எழுப்பப்பட்ட பாஜவின் குரல், யாருக்கு இது எளிதானது? என்பதை நாம் யோசிக்காமல் விட்டுவிட்டோம் எனப் பேராசிரியர் அசுல் சூத்  தெரிவித்தார்.

ஆளும் வர்க்கங்கள் மக்கள் விரோத அரசியலைக் கையில் எடுக்கும் போது, “தேசியவாதம்” என்ற சொல்லாடலைக் கையகப்படுத்தியுள்ளன. இதுதொடர்பான கதையாடல்கள் அதுவரை ஓரங்கட்டப்பட்டுக் கிடந்த மக்களை அணி திரட்ட முயற்சி செய்யும். அதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜகவால் அரசியல் தளத்தில் திரட்டப்பட்ட மக்களின் நலன்களைக் காக்கத் தவறவிட்டன என்பது தான் வரலாறு. 

இவ்வாறு உருவாக்கப்பட்ட தேசியம் சார்ந்த கதைகளால் ஏற்பட்ட விளைவு மிகவும் மோசமானது. அதாவது, அரசாங்கத்தை ஒருவர் மதிப்பீடு செய்யும் போது, அவருடைய சமூக-அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கி, அத்தேவையை நிராகரித்து விடுகிறது.

அரசியல் தளத்தில், காங்கிரஸ் கட்சி தனது மதச்சார்பற்ற கொள்கையை ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு, மறுபகுதியில் கலாச்சார தேசியவாதத்தை வைத்திருந்தது. ஆனால் பாஜக தனது இந்துத்துவா கொள்கை மூலம் இதனைச் சாத்தியப்படுத்தி வருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரே ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காகவே சேவை செய்துள்ளது புலப்படும்.

தேசியவாதம் என்ற பெயரில் ஆளும் வர்க்கம், சமூக பொருளாதார தளத்தில் அரங்கேற்றும் திட்டங்களில் பலன் அடையாதவர்கள் தற்போது பொறுமை இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவ தேசியவாதம் பிரபலமானது எப்படி? 1

3) மறைமுக இந்துத்துவமும், நேரடி இந்துத்துவமும்:

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸின் வெற்றி என்பது மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி என்று அர்த்தமல்ல என எழுத்தாளர் சுஹாஸ் பால்ஷிகர் அறிவித்தார். அதவது, தற்போது பாஜக எந்த விதமான கதையாடல்களை உருவாக்கியுள்ளதோ, அதையே தான் காங்கிரஸ் கட்சியும் தனது கடந்த காலத்தில் செய்துள்ளது என்பதாகும். 

42 சதவிகிதம் இந்து மக்கள் பெரும்பான்மை வாதத்தை ஆதரிக்கிறார்கள் என்றும், 26 சதவிகித இந்து மக்கள் இந்த கருத்தாடலை விரும்பவில்லை என்றும்  சுஹாஸ் பால்ஷிக கூறுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது, சங்பரிவார் அமைப்புகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. அப்போதைய  தேர்தலில் “இந்துத்துவா” என்பது பெரிய அளவில் அரசியல் அரங்கில் இடம்பெறவில்லை அல்லது பயன்படுத்தப்படவில்லை. இதனை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி உறுதிப் படுத்தினார். 

ஆனால் அப்போதே வாக்காளர்களிடம் இது குறித்தான முனைப்பு இருந்தது சில ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. மதம் என்பது பெரும்பான்மையினரின் அரசியலைத் தீர்மானிக்கிறது. அதனால் தான் மிகப் பெரிய தேசிய பிரச்சனைகளைக் கூட எளிதாக ஜீரணித்துக்கொள்ளப் பெரும்பான்மை மக்களால் முடிகிறது.

மக்கள் வெவ்வேறு மதங்களாகப் பிரிந்திருக்கும் வேளையில் அவர்களை ஒன்றிணைக்கும் பணியை மதம் மேற்கொள்வது, இந்திய அரசியலின் மையப் பகுதியாக இருக்கிறது. இதன் மூலம் மிகச் சிக்கலான தடைகளைக் கடந்து, மதச்சார்பின்மை மீதும், சமூகத்தின் மீதும் கொடூரமான தாக்குதலை மேற்கொள்ளப்படுகிறது.

4) அப்புறப்படுத்தும் அரசியல்:

அரசியலிலிருந்து விலக்கி வைக்கப்படுவதை சமூகம் அங்கீகரிப்பது தான் இந்தியத் தேர்தல் அரசியலின் மிகப் பெரிய பலவீனம் என்று எழுத்தாளர் சுகுமார் முரளிதரன் குறிப்பிடுகிறார். 

இந்த அங்கீகாரம், பெரும்பான்மை வாதத்தின் மூலம் சமூகத்தில் அங்கம் வகிக்கும் சில பிரிவினரின் வாழ்வுரிமையை நிராகரிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இது ஜனநாயகத்திற்குத் தேவைப்படும் ஒருமித்த கட்டமைப்பை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுகிறது. இவ்வகையான அரசியலுக்கு மதம் சார்ந்த சமூகம் குறியாகும் போதும், அச்சமூகம் ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நிகழ்த்த நிர்ப்பந்திக்கப் படுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவலின் படி, 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்தேறியது தொடர்பாக 33 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இது 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 39,048 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

காரணம், பெரும்பான்மை வாதத்திற்கு கருத்தியல் ரீதியான அரசியல் தேவைப்படாது என்பதை உணர்ந்து தேர்தல் அரசியலில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென அரசியல் கட்சியினர் விரும்புகின்றனர். அதனையே நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் தாக்கம் தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகின்றன.

சமூகத்தில் உள்ள இயற்கையான பிளவுகளில் தடை செய்யப்பட வேண்டிய அரசியலின் தலையீடு இருப்பதனால் நம்முடைய தினசரி வாழ்க்கை பாதிப்படைகிறது. அமெரிக்காவில் இன ரீதியாக வெறுக்கத்தக்கக் கருத்துக்கள் பரவி வருவதாகவும், மேலும் அவை அதிக அளவில் பேசுவடுவதாகவும் கூட்டாட்சி சட்ட அமலாக்கம் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை இந்தியாவோடு தொடர்புப்படுத்திப்  பார்க்கும் போது, பட்டியல் இன மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் சூழல் நமக்குப் புலப்படுகிறது.

இக்கட்டுரை, எகனாமிக் பொலிடிகல் வீக்லி இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழில் விடுதலை தமிழ்முரசு.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்