தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சீனா பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத்திய எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன அதிபர் ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தமிழ்நாட்டில் சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பில் பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனா பிரதமருக்கு எதிராக திபெத்திய நாட்டினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த கூடும் என சந்தேகித்த சென்னை போலீசார், அவர்கள் குறித்தான தகவலை திரட்டி, விசாரனையை தொடங்கினர்.
இதனை தொடர்ந்து சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியில் தங்கியுள்ள திபெத் மாணவ, மாணவிகளின் அறைகளை சோதனையிடச் சென்றபோது அங்கு 2 மாணவர்கள் தங்கியுள்ள அறையில் சீன அதிபருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட நோட்டீஸ்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

ஒரு பெண் உட்பட 8 திபெத்திய மாணவர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திபெத்திய எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான டென்சின் சுண்டே விழுப்புரம் அருகே கோட்டகுப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திபெத்திய மாணவர்களுக்கு எதிராக சீனா மேற்கொண்டுவரும் அடக்குமுறைக்கு கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது டென்சின் சுண்டே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.