Categories: அரசியல்

தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளின் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் – ராமதாஸ்

வெளியிட்டது
தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளின் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் 1

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று அக்டோபர் 14 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டிற்க்குள் தமிழக அரசுடன் இணைந்து ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்ற கனவு இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தது பாமக என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.டெல்லியில் சென்ற ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டத்தில், நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை ரூ.24,375 கோடி செலவில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் இரு கட்டங்களில் மத்திய அரசு அறிவித்த 82 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்காததை சுட்டிக்காட்டிய நான், புதிதாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 30 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் பயன்களாக தமிழகத்திற்கு இப்போது 6 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ள ராமநாதபுரம், விருதுநகர், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து இயக்கப்படவுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 4,500 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதிகபட்ச மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும் என்பதே நிதர்சனம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்