
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் செப்டம்பர் 30ம் தேதியன்று தொடங்கப்பட்டது. வரையப்பட்ட மஞ்சள் வண்ண கொடி மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் புடைசூழ மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பின்பு கருடன் வரையப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. வீதி உலா நிகழ்ச்சிகளின் போது, உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
அடுத்த நாளான அக்டோபர் 1ம் தேதியன்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா நடைபெற்றது. காலை ஐந்து தலைகளுடன் கூடிய சின்ன சேஷவாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்கள் சுவாமியின் அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்தும், கோலாட்டம் ஆடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான அக்டோபர் 2ம் தேதியன்று அன்ன வாகனத்தில் வலம் வந்த பெருமாளை, நான்மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தியுடன் முழக்கமிட்டு தரிசித்தனர். மலையப்ப சுவாமி சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மூன்றாவது நாள் (அக்டோபர் 3ம் தேதி) அன்று குழல் ஊதும் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 4வது நாளான நேற்றிரவு காலிங்க நர்த்தன அலங்காரத்தில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கொட்டும் மழையிலும் பக்தர்கள் பக்தியுடன் வீதிஉலாவில் பெருமாளை தரிசனம் செய்தனர். இதற்கிடையில் புரட்டாசி மாதம் என்பதாலும் இன்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.
தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானமும், இரவு கொடியிறக்கம் நடைபெறவிருக்கிறது.