இன்று காலை முதலே நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்ப்பட்டுள்ளதாகவும் காலை முதலே தகவல்கள் வெளியான நிலையில் அவரது மகன் துருவ் விக்ரம் அந்த தகவலை மறுத்துள்ளார். 1990ம் ஆண்டு முதல் தனது திரைப்பயணத்தை தொடங்கி தனது அயராத உழைப்பில் இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்து இருப்பவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் டப்பிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். சினிமாவில் எந்தோவொரு பின்புலமும் இல்லாமல் காலடி எடுத்துவைத்து தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளார். அவர் ஆதித்த கரிகாலனாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கூட தற்போது தான் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கோப்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பல விதமான வேடங்களில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. நவராத்திரி படத்தில் சிவாஜி 9 கெட்டப்புகளிலும், தசாவதாரத்தில் கமல் 10 கெட்டப்புகளிலும் நடித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் மிஞ்சும் வகையில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பெசன்ட் நகரில் இருந்த அவரது வீட்டில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெஞ்சுவலி என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் ஆஞ்சியோ சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின. இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.

ஆனால் விக்ரமின் மேலாளர் இந்த தகவலை மறுத்து இருந்தார். அவருக்கு இதயப்பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டு இருந்ததாகவும், ஹார்ட் அட்டாக் இல்லை, இன்றே அவர் வீடு திரும்புவார் என்றும் விளக்கமளித்திருந்தார். ஆனாலும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து மாரடைப்பு என தகவல் பரவ, அவரது மகன் துருவ் விக்ரம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் அப்பாவுக்கு மாரடைப்பு எதுவுமில்லை, நெஞ்சுப்பகுதியில் சிறிய அசௌகரிம் மட்டுமே, தவறான தகவலைப் பரப்பாதீர்கள் அப்பா மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் இன்றே வீடு திரும்ப உள்ளார் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
