சென்னை ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது, என்ஜாய் எஞ்சாமி பாடலை அந்தப் பாட்டை எழுதி இயக்கிய அறிவு இல்லாமல் பாடியது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த நிலையில் அறிவு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஆல்பம் பாடல் ஆக வெளியாகி உலக அளவில் மிகப் பிரபலமான பாடலாக இருந்தது என்ஜாய் எஞ்சாமி. இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் மற்றும் பாடகர் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாடலை எழுதி இருந்தவர் அறிவு தான். மேலும் இடையிடையில் வரும் ஒப்பாரி போன்ற குரலையும் அவரே பாடி அசத்தியிருப்பார். குழந்தைகள் வரை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் பாடலாக இது இருந்தது. ஒரு வருடத்தில் 429 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் பாடலை எழுதிய அறிவுக்கு அந்த புகழ் கிடைத்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரோலிங்ஸ்டோன் என்ற பத்திரிகை இந்த பாடலைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியது. அதில் தீ மற்றும் ரேப் பாடிய சான் வின்ஸ்டன்ட் தி ஆகியோரின் படத்தை மட்டுமே இடம்பெற்று இருந்தது. இதனால் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ரோலிங்ஸ்டோன் பத்திரிக்கையின் டிஜிட்டல் பதிப்பில் அறிவு படத்தை இடம்பெறச் செய்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் தொடங்கப்பட்ட செஸ் ஒலிம்பிக் போட்டிகளில் என்ஜாய் எஞ்சாமி பாட்டு பாடப்பட்டது. இதில் பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் இருவரும் இந்த பாடலை பாடினர். அறிவு மேடையில் இடம்பெறாதது சர்ச்சையானது. நெட்டிசன்களும் கூட இதை கவனித்து விமர்சித்து வந்தனர். அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த சர்ச்சை பூதாகரமாகி கொண்டே போனதால் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அறிவு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது நம் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். அதில் என்ஜாயி எஞ்சாமி பாடலை நானே இசையமைத்தேன், எழுதினேன், பாடினேன், நடித்தேன். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கூட கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் செலவழித்து அதை எழுதியுள்ளேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக இருந்த முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இந்த பாடலும் அது போல ஒன்றுதான். இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இது அனைத்தும் அழகான பாடல்களாக நம்மிடம் பேசுகிறது. ஏனென்றால் நாம் இரத்தமு,ம் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும். ஜெய்பீம். முடிவில் உண்மை எப்போதும் வெல்லும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Youtube Video Code Embed Credits: Connecting Dots