
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவி்த்துள்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சில பேர் சாணம் வீசி கருப்புக் காகிதத்தால் கண்களை மறைத்து அவமதிப்பு செய்துள்ளார்கள். இது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (நவ.4) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகப் பொதுமறை எனக் கொண்டாடப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர் ஆவர். தமிழ், தமிழினம் என்ற எல்லைகளைத் தாண்டி அவர் போற்றப்படுகிறார்.
வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை” எனப் பதிவிட்டு இருக்கிறார்.