குட்டிப்புலி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதை தொடர்ந்து இவ்வாறு கொம்பன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களை கொடுத்திருக்கிறார். இதே போன்ற கிராமத்து கதையம்சத்தில் விருமன் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் கிராமத்து பின்னணியை கொண்ட படங்களை இயக்கும் முத்தையா, இந்த படத்தையும் அதே முறையிலேயே இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, ராஜ்கிரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. கார்த்திக்கின் தோற்றம் பருத்திவீரன் படத்தை போலவே இருந்ததால் படம் பெரிய வெற்றி அடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இந்த படத்தின் கதை விமர்சனம் குறித்து பார்க்கலாம்..

கிராமத்தில் தாசில்தாராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவருடைய மனைவி சரண்யா பொன்வண்ணன். இவர்களுக்கு நான்கு மகன்கள் இருக்கிறனர். நான்காவது மகன்தான் கார்த்திக். பணவெறி பிடித்த தாசில்தார் தன்னுடைய குடும்பத்தை மட்டுமில்லாமல் ஊரையும் அடிமையாக வைத்திருக்க நினைக்கிறார். இதனால் பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் கார்த்தி தாயார் சரண்யா பொன்வண்ணன் இறந்து விட, கார்த்தி தனது மாமாவான ராஜ்கிரண் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். தன் தாயின் இறப்பிற்கு பிரகாஷ்ராஜ் தான் காரணம் என்று கார்த்திக் திடமாக நம்புகிறார். இதனால் தனது தந்தையை பழிவாங்க துடிக்கிறார் கார்த்தி. சரண்யா பொன்வண்ணனின் இறப்பிற்கு காரணம் என்ன? பிரகாஷ்ராஜ் தான் சரண்யாவை கொன்றாரா? தனது தாயார் பெயரில் இருக்கும் சொத்துக்களை ஏமாற்றி அபகரித்துக் கொள்ள நினைக்கும் தந்தையிடம் இருந்து, சொத்துக்களை பாதுகாப்பாரா? தனது தந்தையை பழி வாங்குவாரா? என்பது குறித்து தான் படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் பாசிடிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது, முதலில் பாடல்கள் தான். அனைத்து பாடல்களுமே ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. மேலும் அவரவர்கள் கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளனர். கிராமத்துக்கே உரிய மணம் மாறாமல் நையாண்டி, ஆக்சன், சென்டிமென்ட் என்று அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் கார்த்தி. முதல் படம் என்று தெரியாத அளவிற்கு தேன்மொழியாக வந்து தனது சிறப்பான நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பிரமாதமாக வந்திருக்கிறது. அதேபோல் பார்க்கும் நமக்கே கோபம் வரவழைக்கும் அளவிற்கு மிக பயங்கரமான வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். மேலும் சூரி சிங்கம்புலி காமெடிகள் கதையின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கின்றனர். சரண்யா பொன்வண்ணன் சிறிது காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் தன்னுடைய பங்களிப்பை மிகப் பிரமாதமாக அளித்திருக்கிறார். அதேபோல் சூரியின் காமெடியும், பழைய படங்களைப் போல் அல்லாமல் நன்றாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக இருப்பது, ஏற்கனவே இயக்கிய படங்களில் வரும் சென்டிமென்ட்களை அதேபோல் வைத்திருப்பது ஆடியன்ஸை சலிப்படைய வைத்திருக்கிறது. சென்டிமென்ட் என்ற பெயரில் அறுவை கொஞ்சம் ஓவராகவே இருந்துள்ளது. இது ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே திருப்தி அடைய வைப்பதாகவும் அனைத்து தரப்பினரையும் படம் சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும். படத்தில் தந்தையே மகனுக்கு வில்லனாக இருப்பது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாகவே தான் இருக்கிறது. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாவது பாதி மிக மெதுவாக செல்வதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. விருமன்.. கடைசியில் வெறுமன்.