இந்தி தான் இந்தியாவின் ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டமையால் ட்விட்டரில் மொழி போர் உருவாகியுள்ளது.
தேசிய இந்தி நாளான இன்று (செப்.14) இந்தியா பல மொழி பேசும் நாடு. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்துவம் உண்டு. ஆனால், நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போது, சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல், அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் இந்தி மாறும் என்று அமித் ஷா டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இதனால் வெகுண்டு எழுந்த கன்னட, தமிழ், வங்காள ட்விட்டர் வாசிகள் #stophindhiimposition ஹாஸ்டகோடு மொழி போருக்கு இறங்கி விட்டார்கள்.
1942ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சபை இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேசிய அளவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கும், முன்னாள் பாஜக தேசிய கலைவருமான அமித்ஷா பதிவிட்டிருந்தார். அதில், “இன்று, இந்தி தினத்தை முன்னிட்டு, நம்முடைய தாய்மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தி மொழியையும் அதிகளவில் பயன்டுத்திக் கொண்டு, மகாத்மா காந்தி மற்றும் இரும்பு மனிதர் சர்தார் படேலின் ஒரே மொழி கனவை நனவாக்குவோம். இனிய இந்தி நாள் கொண்டாட பங்களிப்பு செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழியை திணிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ் போன்ற மாநில மொழிகளை அரசு தேர்வுகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திமுகவின் எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பது நாட்டை ஒருபோதும் ஒருங்கிணைக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் தகவல் தொடர்பு செயலாரான வைகை செல்வன், இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், நாட்டில் மயில்களை விட காக்கைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காக்கையை தேசிய பறவையாக்க முடியுமா? என்று அண்ணா அன்றே கூறியிருந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.