இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் மர்ம நபர்கள் தற்போது கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் கடுப்பான விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாக்ராமில் கோபமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தகுந்த இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் அதன் பின்னர் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் பாவ கதைகள் என்னும் ஆந்தாலஜி படத்தில் லவ் பண்ணா உட்ரனும், கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் அடுத்த படமான ஏகே 62வை விக்னேஷ் இயக்க இருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

ஆனால் திடீரென ஏகே62 வில் இருந்து விலகி இருந்தார் அஜித்குமார். இது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ரவுடி பிக்சர்ஸ் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தனது மனைவியுடன் இணைந்து நடத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த நிறுவனத்தின் மூலமாக நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி, கனெக்ட் ,காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவுடன் அவருக்கு 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக இருவரும் வலம் வந்தனர். கோவில்களுக்கு செல்வது, அவுட்டிங் செல்வது, டூர் செல்வது என்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து நான்கே மாதங்களில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களான விஷயத்தை அறிவித்து இருந்தனர்.

இது அப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் கூட தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும், இது தனக்கு மிகவும் பயமாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் கணக்கை அவரது நயன்தாராவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.