மிர்ச்சி செந்தில் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி வேறு சேனலுக்கு சென்றுள்ள தகவல் கிடைத்துள்ளது. அவர் புதிய சேனலில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாகவும் தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது.சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் மிர்ச்சி செந்தில். இவர் ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் ஆர் ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மதுரை என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். இந்தத் தொடர் 2009 வரை இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பானது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் 2011ம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். பின்னர் தவமாய் தவமிருந்து, பப்பாளி, வெண்ணிலா வீடு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், 777 குறும் தொடர், அச்சம் தவிர், கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை போன்ற சில வெப் தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் சின்ன திரையிலேயே அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் கடைசியாக நடித்து முடித்து இருந்தார். 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்தத் தொடரில் மாயன் கதாபாத்திரத்தில் செந்தில் நடித்து வந்தார். ஆனால் திடீரென ஒரு நாள் இந்த சீரியல் முடிந்து விட்டதாக நாடக குழு அறிவித்திருந்தது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும் ஸ்ரீஜாவிற்கும் காதல் மலர்ந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த செந்தில் முதல் திருமணத்தை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ஸ்ரீஜாவை கரம் பிடித்துக் கொண்டார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் ஸ்ரீஜா கர்ப்பமாக இருந்தார்.

சமீபத்தில் அந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த மிர்ச்சி செந்தில் சில காலமாக எந்த தொடரிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு தாவி இருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. அண்ணன் என பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடர் அண்ணன் தங்கை கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் அண்ணனாக செந்திலும், தங்கையாக பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் செந்திலுக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம் நடித்து வருவதாகவும் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. சரவணன் மீனாட்சி போல இந்த சீரியலும் செந்திலுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!