நடிகர்கள் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் அநீதி. அந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களின் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த வசந்த பாலன் தற்போது சைக்கோ திரில்லர் ஜானர் கதையை கையில் எடுத்துக்கொண்டு அழுத்தமான செய்தியை இந்த நாட்டிற்கு கொடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏழைகள் என்றாலே திருடுபவன் தான் என்னும் எண்ணத்திற்கு பலத்த சாட்டையடி கொடுத்திருக்கிறது அநீதி திரைப்படம். தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை காணலாம்.

சென்னை மாநகரத்தில் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத இளைஞராக வருகிறார் அர்ஜுன் தாஸ். இவர் ஒரு உணவு விநியோகம் செய்யும் கம்பெனியில் வேலை செய்கிறார். அந்த வேலையில் அவருக்கு சுமையும், மரியாதை இன்மையுமே ஏற்படுகிறது. இந்த பணியால் ஏற்படும் மன அழுத்தம் அந்த இளைஞரை கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு ஒரு பணக்கார வீட்டில் பணி பெண்ணாக வேலை பார்க்கும் துஷாராவின் காதல் கிடைக்கிறது. ஆதரவற்ற பின்னணி கொண்ட இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். அப்போது துஷாரா வேலை பார்த்து வரும் வீட்டின் முதலாளி இறந்து விடுகிறார். அவர் இறந்ததற்கான பழி அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா மீது விழுகிறது. பின்னர் அந்த கொலைப் பழியில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? அர்ஜுன் தாஸின் மனநிலை பிரச்சனை என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை.

அனைத்துமே வியாபாரம் ஆகிப்போன இந்த சமூகத்தில் பணம் படைத்தவர்கள் தங்களை விட வசதி குறைவானவர்களை எப்படி நடத்துகின்றனர்? வேலை கொடுக்கும் அழுத்தம் தொழிலாளர்களின் மனதை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை கணக்கச்சிதமான திரைக்கதை மூலமாக நகர்த்தி இருக்கிறார் வசந்த பாலன். உணவு விநியோகம் செய்யும் இளைஞராக வரும் அர்ஜுன் தாஸ் மன அழுத்தம் கொண்ட இளைஞனான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கோபத்தில் தன்னை மறந்து வெடிக்கும் இடங்களிலும், துஷாரா விஜயனுடன் காதல் காட்சிகளிலும் இரண்டு விதமான மனநிலைகளை வெளிப்படுத்தி கணக்கச்சிதமாக நடித்திருக்கிறார். இதுநாள் வரை வில்லனாக நடித்து வந்த அர்ஜுன் தாஸை வசந்தபாலன் சரியாக கையாண்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோல் துஷாராவும் தனது முந்தைய பாணியில் இருந்து சற்று விலகி முதலாளி பெண்ணிடம் அடங்கி ஒடுங்கி அழும் காட்சிகள் எல்லாம் நம்மை ஒரு நிமிடம் கலங்க வைத்திருக்கிறார். உயிர் வாழவே அடிப்படையான பணத்திற்கு பணியிடத்தில் அவமானப்படும் இடங்களிலும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பலரின் இதயங்களை வென்றிருக்கிறார். அர்ஜுன் தாஸிடம் தஞ்சம் புகுவதிலிருந்து தொடங்கி, அவர் மீது ஒரு கட்டத்தில் வெறுப்பு கொண்டு அவரை அடிப்பது வரை துஷாரா நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் வனிதா, பரணி, காளி வெங்கட் போன்ற பலரும் இந்த திரைக்கதைக்கும் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர். தனது மகனுக்காக முதலாளியிடம் கெஞ்சும் காளி வெங்கட்டின் நடிப்பு அழ வைத்திருக்கிறது. இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே மகன் தந்தை காட்சிகளில் சிறப்பான காட்சியாக காளி வெங்கட் அர்ஜுன் தாஸுக்காக பேசும் காட்சிகளை குறிப்பிடலாம்.

உணவு விநியோகம் செய்யும் இளைஞர்களுக்கு நடக்கும் அவமானங்கள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், தனியார் மயமாகி வரும் நாடு போன்றவற்றை தைரியமாகவும் எதார்த்தமாகவும் எளியோருக்கு புரியும் வகையிலும் ஆணித்தரமாக கொடுத்திருக்கிறார் வசந்தபாலன். இந்த துணிச்சலுக்காக அவருக்கு பாராட்டுகளை கூறியே ஆக வேண்டும் இந்தியாவுக்கு கீழே பிரைவேட் லிமிடெட் போடுவாங்க போல? தண்ணீர் விக்கிற விலைக்கு உனக்கு தண்ணி வேணுமா? போன்ற வசனங்கள் எதார்த்த நிலையை பிரதிபலிக்கின்றன. படம் தொடங்கியதிலிருந்து இறுதி வரை தொய்வில்லாமல் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சிறிது இறுக்கத்தை கொடுக்கின்றன. பாடல்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. கொலை செய்யும் பல காட்சிகள் இறுக்கத்துடனே நகர்கிறது. இருந்தபோதிலும் ஏழைகள் என்றாலே திருடுவான் என்று எண்ணும் பலரின் கேடு கெட்ட எண்ணத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறது அநீதி திரைப்படம்..! இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 4.0/5
YouTube Video Embed Code Credits: Think Music India