நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பட பூஜை இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.படத்தில் நடிக்கும் நடிகர்கள் பலரும் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் திரையுலகிம் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

பிண்ணனியில் நடிக்கும் குழு கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

தற்போது முதல்முறையாக ‘ஜவான்’ படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இவரது மகன் சூர்யாவும் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதன் பின்னர் ‘சிந்துபாத்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ பாகம் இரண்டிலும் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாக படத்திற்கு ‘பீனிக்ஸ் வீழான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றுள்ளது.

பிரேவ் மேன் பிக்சர் சார்பாக ராஜலட்சுமி அரசகுமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று(நவ.24) நடைபெற்றது.

மேலும் படத்தின் டைட்டிலை புது போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பூஜை முடிந்து பேட்டி அளித்த சூர்யா, “தயவு செய்து தன்னையும் தனது தந்தையையும் ஒப்பிடாதீர்கள், எனது தந்தை வேறு நான் வேறு அப்பாவின் பெயரில் வரக்கூடாது, நம்முடைய சொந்த முயற்சிகள் தான் வர வேண்டும் என்று நான் முடிவு செய்து இருந்தேன்”

“நான் எனது தந்தையின் ஷூட்டிங் ஒன்றுக்கு சாப்பாடு கொடுக்க சென்றிருந்தேன். அப்போதுதான் முதல்முறையாக மாஸ்டரை சந்தித்தேன். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த சண்டை காட்சிகளை எனக்கு பார்க்க மிகவும் பிடிக்கும் அதனால் நான் அங்கு பார்த்துக் கொண்டிருந்தேன்”

“அப்போது மாஸ்டருக்கு ஒரு வணக்கம் வைத்தேன். பின்னர் தான் எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த செய்தியைக் கேட்ட எனது தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்” என்று பேசினார்.

சூர்யாவுக்கு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.