திரைத்துறையில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது இந்த வருடத்தின் கடைசி மரணமாக மற்றொரு நபர் காலமாகி இருப்பது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2023ம் ஆண்டு திரைத்துறையினருக்கு நல்ல ஆண்டாக அமையவில்லை. மக்கள் விரும்பிய பல நடிகர்கள் காலமாகி இருக்கின்றனர். மயில்சாமி, மனோபாலா, ஆர் எஸ் சிவாஜி, ‘எதிர்நீச்சல்’ சீரியல் மாரிமுத்து, கேப்டன் விஜயகாந்த், சரத்பாபு, நடிகர் மற்றும் இயக்குனருமான கஜேந்திரன் என்று பிரபலங்களின் மறைவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திரைத்துறையில் இருந்த நல்ல கலைஞர்கள் பலரை 2023ம் ஆண்டு அநியாயமாக பறித்துக் கொண்டது. இந்த நிலையில் இன்று இந்த ஆண்டின் கடைசி மரணமாக மற்றொரு சின்னத்திரை நடிகர் காலமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலமாக பிரபலமானவர் நடிகர் அன்பு (எ) அன்பழகன்.

இந்த சீரியலில் இவர் பி.டி வாத்தியாராக நடித்து அசத்தியிருந்தார். இவர் சொல்லும் “எஸ் சார், நோ சார், சாரி சார்” என்கிற வசனம் 90ஸ் கிட்ஸ்களிடையே மிகப் பிரபலமாக இருந்தது. தொடர்ந்து தாயுமானவன், ரெட்டைவால் குருவி, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அண்ணா’ மற்றும் ‘சீதாராமன்’ சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மரணம் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னமும் கேப்டன் விஜயகாந்தின் இழப்பிலிருந்து மீண்டு வராக திரையுலகினருக்கு இந்த செய்தி மற்றொரு பேரிடியாக அமைந்திருக்கிறது.