சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ சீரியலில் இருந்து ஹீரோவாக நடித்து வந்த அக்னி விலகி இருக்கும் நிலையில், புது அர்ஜுனாக யார் நடிக்க போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. தற்போது அந்த நடிகர் யார்? என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது ‘மலர்’ சீரியல். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் அக்னி நடித்து வந்தார். இவர் நேற்றைய தினம் சீரியலில் இருந்து விலகி விட்டதாக அறிவித்திருந்தார். தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுசரியாக நீண்ட காலம் எடுக்கும் என்பதால் சீரியல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விலகி விட்டதாக அறிவித்திருந்தார்.

மலர் மற்றும் அர்ஜூன் ஆகியோரின் காட்சிகளுக்காகத்தான் இந்த நாடகத்தை விரும்பி பார்த்து வருகிறோம், எனவே சீரியலை விட்டு அக்னி விலக வேண்டாம் என்று ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்த போதிலும் அவரை மாற்றம் செய்து புதிய நடிகர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலின் மூலமாக பிரபலமான சுரேந்தர் தான். இவர் முதல் முறையாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானார். தற்போது ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹீரோயினும் இவரும் இணைந்து அந்த நாடகத்தில் நடித்து இருந்தனர்.

அதன் பின்னர் அவருக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராஜா மற்றும் அஞ்சலி இருவரின் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் இந்த நாடகத்தை விரும்பி பார்த்து வந்தனர். ஆனால் திடீரென இந்த சீரியலும் ஒரு நாள் முடிவுக்கு வந்திருந்தது. தொடர்ந்து அடுத்து சுரேந்தர் என்ன செய்யப் போகிறார்? என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் ‘மலர்’ சீரியல் புது அர்ஜுனாக அவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர் “புதிய தொடக்கம்” என்று கூறியிருக்கிறார். எனவே இனி இவர்தான் ‘மலர்’ சீரியலில் அர்ஜுனாக நடிக்க இருக்கிறார் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.
View this post on Instagram