
2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியது.
இந்த சட்டத்தின் வாயிலாக சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக இந்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக அங்காங்கே பல்வேறு தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவியது.
இந்நிலையில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இதனையடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கடசிகள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது.