
தமிழகத்தில் வரும் 3 ஆண்டுகளுக்கு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். 5 மற்றும் 8ம் வகுப்பிற்க்கான பொதுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் , ஆனால், அத்திட்டம் தமிழகத்தில் செயல்பட 3 ஆண்டுகள் தமிழகத்துக்கு விலக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
தமிழ் நாட்டில் 10,11,12 ம் வகுப்புகளுக்கு மட்டும் மாநிலம் முழுவதும் ஒரே விதமாக பொதுத்தேர்வு நடந்து வருகிறது, அதே போல், இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என்றும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பற்றியும், காலாண்டு தேர்வு விடுமுறை குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறுகையில் ‘பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பது ரத்து என்ற வதந்தி பரவி வரும் சூழ்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் அதை நம்ப வேண்டாம். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும்.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது, இது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் முறையில் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆகவே, 3 ஆண்டு காலத்தில் மாணவர்கள் தங்களுடைய அறிவு மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளுவதற்கான வாய்ப்புகள் உள்ளன . இன்று எந்த நிலை உள்ளதோ இதே நிலை தான் அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு தொடரும் என தெரிவி்ததுள்ளார்.
முதலில் ஆசிரியர் சங்கத்தில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில், அனைத்துப்பள்ளிகளிலும் காந்தியை பறைசாற்றும் வகையில், நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என்று தகவல் பரவியது.