திருத்தப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இது தொடர்பான போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது.

ஆதலால் இவ்விடத்தை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சித்தராமையா தொகுதிக்கு பார்வையிட செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட மங்களூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் அவருடைய வருகை மங்களூரில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூரில் போராட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை சுட்டிக்காட்டி பேசிய சித்தராமையா, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது அறிவிக்கப்படாத அவசரகால நிலையை குறிப்பதாகும். மேலும் இதன் மூலம் நாட்டிலுள்ள வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.