வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான நுழைவு தேர்வில் வெறும் 14 சதவிகித மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு பதிலாக வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் அதிகம். இவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. வெளிநாடுகளில் இந்தியாவை விட குறைவான கட்டணங்களே செலவாகும். அது மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இளங்கலை மற்றும் முதுநிலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்தே 5 ஆண்டுகள் தான் செலவாகும்.

இதனால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கிழக்காசியா நாடுகளில் படிக்க அனுப்புகிறார்கள். அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் முன்னணி பள்ளிகளில் ஒன்றாக பார்க்கப்படும் வித்யா விகாஸ் சீனா மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, மருத்துவ பிரிவுக்கு தகுதி பெறாத மாணவர்களின் பெற்றோரிடம் பேசி, ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதனால் தான் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, வெளிநாடுகளில் படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு வாரியம் “வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு” என்ற பெயரில் தேர்வினை நடத்துகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை சுமார் 61,708 மாணவர்கள் இத்தேர்வில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் இவர்களுள் வெறும் 14.2 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 8,764 மாணவர்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் சீனா பல்கலைக்கழகங்களில் 20,019 மாணவர்களும், ரசியா பல்கலைக்கழகங்களில் 11,724 மாணவர்களும் மற்றும் உக்ரைன், நேபால், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயின்ற மாணவர்களும் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இவற்றுள் அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்த மாணவர்களே அதிகமாக வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 25.69 சதவிகிதமாக பதிவு செய்து முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக ஜோர்ஜியா 20.69 சதவிகிதங்களோடு முன்னனியில் இருக்கிறது.