காங்கிரஸ் தலைமையிலாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என ராகுல் காந்தி அறிவிக்க வேண்டுமென தேர்தல் கள வல்லுநர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், பேரணி என நடைபெற்று வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கட்சிகள் பேரணி நடத்தின.

இந்த சட்டத்தை முதலில் இருந்தே எதிர்த்து வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத்தலைவரும், தேர்தல் கள வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்தை ஆதரித்த மாநில முதல்வர்களே வீதியில் இறங்கி போராட துவங்கி விட்டனர். மக்களை பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் தெருவில் இறங்கி போராட தயக்கம் காட்டுகிறார்கள்” என கூறினார்.
இதன் எதிரொலியாகவே, காங்கிரஸ் தலைமையிலும் நேற்று டெல்லியில் பேரணி நடைபெற்றது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மீண்டும் ராகுல் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்ட காலத்திற்கு ராகுல் காந்தி வந்து விட்டார். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அதே சமயம் குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த விடமாட்டோம் என ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். மாநில முதல்வர்கள் அறிவித்திருந்தாலும், காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மக்களை குழப்பக் கூடாது என தெரிவித்துள்ளார்.