புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசியர் சி.பி.சந்திரசேகர் மத்திய பொருளாதார புள்ளியியல் நிலைக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக மத்திய புள்ளியில் துறையினால் வெளியிடபடும் புள்ளிவிவரங்கள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி போன்ற புள்ளிவிவரங்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

அதேபோல சமீபத்தில் டெல்லி ஜவர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் முகமூடி அணிந்த குண்டர்களால் தாக்கப்பட்டனர். அதேவேளையில், இடதுசாரி மாணவர்களை பயங்கரவாதிகள் எனவும் சித்தரிக்க பல்வேறு வகையான வழிகளில் மத்திய அரசும், வலதுசாரி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.
இதனால் அதிருப்தி அடைந்த ஜவர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும், மத்திய பொருளாதார புள்ளியியல் நிலைக் குழு உறுப்பினருமான சி.பி.சந்திரசேகர் தனது ராஜினாமா கடிதத்தில், “நான் வசிக்கும் ஜேஎன்யூவின் தற்போதைய சூழ்நிலைக் காரணமாக, நான் நாளையக் கூட்டத்தில் பங்குபெற இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சமீபத்தில் பாதிப்புக்குள்ளான புள்ளியியல் அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது தற்போதையச் சூழலில் சாத்தியமல்ல என நான் கருதுகிறேன்” என்று கூறிய அவர்,
” கடந்த காலத்தில் நம்பகமான புள்ளியியல் அடித்தளத்தைக் கட்டமைக்க இந்தக் குழுவில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அவர்களுடைய தன்னாட்சியை தற்போது அரசியல் அழுத்தங்கள் குறைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. மேலும் சரியாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் அனைத்தும் நிலைகுலையச் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற ஒரு சூழலில் நான் இந்தக் குழுவில் பணி செய்ய முடியாது” என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.