சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களுக்கும் போகலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறயுள்ளது.

ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடைசியாக சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இதனை எதிர்த்து 65 சீராய்வு மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சபரிமலை விவகாரம் மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்சி பெண்களை அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. அது வரை தற்போதைய நிலை தொடரும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், நாளை முதல் சீராய்வு மனுக்களை விசாரிக்க உள்ளது. இந்த பெஞ்சில் ஒருமித்த தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முந்தைய பெஞ்சில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய இந்து மல்கோத்ரா, நாரிமன், சந்திர சூட் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.