
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகும் சில நாள்கள் விடுமுறை விடப்பட்டு வருவது வழக்கம். இதற்கிடையில், பருவமழைக் காலங்களில் புயல் உருவாகி, கனமழை பெய்யும்போதும் முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டெல்லி, புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு காற்று மாசுப்பாட்டின் அளவு இன்னும் குறையாமல் இருப்பதன் காரணமாக, டெல்லி, புறநகர் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், திங்கள்கிழமை தான் இனி பள்ளிகள் மீண்டும் இயங்கும். இதேபோன்று, நிலக்கரி உள்ளிட்டவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களும் நாளை, நாளை மறுநாள் மூடப்பட வேண்டும் என்று டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.