கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் அடுத்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் தொடங்கும் என கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் “குழந்தைகள் மற்றும் வளரும் இளம் பெண்களின் கல்வியில் புதிய போக்குகள்” என்கிற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கிவைத்தார். பின்னர் பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்க, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள், உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் போது தான் டிசி(TC) தரப்படுவதாகவும், அப்படியான மாணவர்களுக்கு டிசி தரலாம் என்று அவர்களின் பெற்றோர்களே கூறுகின்றனர்.

ஏற்கனவே பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட மாணவர்களுக்கும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் TC ஏதும் வழங்கப்படவில்லை என்றும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கைமீறி செல்லும் போதுதான் TC வழங்கப்படும் என்றும் இனி மாணவர்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்வுகள் முடிந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும், வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.