
சிரியா நாட்டின் மீது கடந்த 2011ம் ஆண்டு மார்ச்சிலிருந்து கிளர்ச்சியாளர்களை அடக்கும் வகையில் அரசு நடத்தி வரும் போரில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வேறு இடங்களை தேடி தஞ்சம் புகுந்துள்ளனர்.
இத்லிப் என்ற பகுதியில் அல் கொய்தா பயங்கரவாதிகள் இயக்கத்தில் தொடர்புடைய போராளி குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதனால், இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவோம் என சிரிய அரசு தொடர்ந்து உறுதி கூறி வருகின்றது.
இந்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அரசு ஆதரவு படைகளின் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து 4 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தங்களது வீடுகளை விட்டு விட்டு இடம் பெயர்ந்தனர்.
அரசு தரப்பில் நடத்தப்படும் தாக்குதலை தவிர்க்கும் விதமாக ரஷ்யா கடந்த ஆகஸ்டு இறுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு பின்னரும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் 250 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. 30 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது. அவர்களில் தல்மனாஸ் கிராம பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 உறுப்பினர்கள் மற்றும் படாமா கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் உள்ளிட்டோரும் அடங்குவர்.