இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த ‘அயலான்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் தற்போது நடைபெற்று இருக்கிறது. படக்குழுவினருடன் கேக் வெட்டி சக்சஸ் மீட்டை கொண்டாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ‘டாக்டர்’, ‘டான்’ உள்ளிட்ட ரூ.100 கோடி வசூல் படங்களை தமிழ் திரையுலகுக்கு கொடுத்தவர்.

இவர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் ‘அயலான்’. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இயக்குனர் ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதையை மையமாகக் கொண்ட இந்த படம் தொடங்கிய சில மாதங்களிலேயே நின்று போனது.

கொரோனா காரணமாக பல நாட்களாக ஷூட்டிங் நடக்காமல் இருந்து வந்த நிலையில், 5 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. ‘அயலான்’ திரைப்படத்தில் ஏலியனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் சிறந்த விஎஃப்எக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

பல ஆண்டுகள் தடைகளை தாண்டி இந்த படம் இந்த வருடம் வெளியாகியிருந்தது. ராகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

குழந்தைகளை இந்த படம் வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்த படம் ரூ.100 கோடி வசூலை எட்டி இருப்பதாக சொல்லப்பட்டாலும், பல மாநிலங்களில் இந்த படம் தோல்வியை சந்தித்ததாக கூறப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. தெலுங்கில் இந்த படம் ரிலீஸ் ஆகாததால் அங்கும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்பட்டது.

ஆனால் இந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ‘அயலான்’ படத்தின் வெற்றியை சிவகார்த்திகேயன் கொண்டாடி இருக்கிறார். சக்சஸ் மீட் பார்ட்டியில் ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் கலந்து கொண்டுள்ளார். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிபி படம் ஒன்றில் கமிட்டாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.