சிறுவனுக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் – விக்ரமன்.!

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருக்கும் ஒரு செய்தி என்று சொன்னால் அது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி சிறுவனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவம் தான். இது குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் விக்ரமன் நேரடியாக பாதிக்கப்பட்ட சிறுவனை சென்று சந்தித்து அந்த புகைப்படங்களுடன் சில பதிவுகளையும் பகிர்ந்து இருக்கிறார். தற்போது அவரின் அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்தும் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதலும் கூறியிருக்கிறார். அதை நீண்ட பதிவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் விரைவில் நல்ல தீர்வை எட்டும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிறுவனுக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் - விக்ரமன்.! 1
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், நாங்குனேரியில் தலைவிரித்தாடும் ஜாதிவெறி – திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் பல்வேறு ஜாதியினரும் வசிக்கும் (தென்னிமலை, மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம், பட்டப்பிள்ளைபுதூர், நெடுங்குளம், நாங்குநேரி) ஊர்களுக்கு நடுவே சுமார் 150 பட்டியலின குடும்பங்களை கொண்ட பெருந்தெரு எனும் பகுதி அமைந்திருக்கிறது. சுற்றியும் ஆதிக்க ஜாதியினர் பெரும்பான்மையாக சூழ இருக்கும் அங்கு தினமும் பதற்றம் தான். பொதுவிநியோக கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிறுத்தம், தெப்பக்குளம் போன்ற அன்றாட தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் அந்த ஊர்களை கடந்து தான் போக வேண்டும். பெருந்தெருவுக்கு என இருக்கும் ஒரே ஒரு நீர்த்தேக்கத் தொட்டியிலும் (3000 லிட்டர்) அருகிலிருக்கும் சர்ச், பள்ளிக்கூடம் மற்றும் சில குடியிருப்புகளுக்கு நீர் பகிர்ந்தளிப்பதால் வாரமொருமுறை தான் குடிநீர் வரும். பட்டியல் ஜாதியினர் வசிக்கும் இங்கு மட்டும் கடும் குடிநீர் தட்டுப்பாடு.

அருகிலேயே இருக்கும் வானமாமலை பெருமாள் கோயிலுக்குள் இவர்களுக்கு அனுமதியில்லை. திருவிழாக்களில் பங்கேற்க அனுமதியில்லை. மீறி கலந்து கொண்டால் வெட்டு குத்து வன்முறை தான். தெப்பக்குளத்தை பயன்படுத்துவதற்கும் இவர்களுக்கு அனுமதியில்லை. தினமும் பள்ளி, கல்லூரிக்கு போய் வரும் மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற அச்சத்துடன் வசிக்கிறார்கள் தாய்மார்கள். இந்த பதற்றமான சூழலால் நாங்குனேரியில் வாழ்ந்து வந்த அய்யர்கள், பிள்ளைமார்கள் கூட பெருமளவில் அப்பகுதியை காலி செய்துவிட்டு வெளியேறியதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான குரூரமான வரலாறு கொண்ட நாங்குனேரியில் தான் சின்னத்துரை(17) மற்றும் அவர் தங்கை(13) மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்கியது ஜாதிவெறி தலைக்கேறிய ஆதிக்கஜாதி மாணவர்கள்.

சின்னத்துரைக்கு கப்பலில் பணி புரிய வேண்டும் என்ற லட்சியம். அவர் தங்கை சந்திராவிற்கு கலெக்டராக வேண்டுமாம். இது போன்ற பிஞ்சுகளின் கனவு நனவாக அந்த பகுதி வன்கொடுமை பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஜாதிவெறி மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் எனவும் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். அந்த தங்கை தன் உயிருக்கும் அஞ்சாது தன் அண்ணன் உயிரை காப்பாற்றியிருக்கிறாள். அதனால் அவளது இடதுகையிலும் வலது கை விரல்களிலும் அரிவாள் வெட்டுக்கள். அவள் தடுத்திருக்காவிட்டால் சின்னத்துரை கழுத்தில் அரிவாள் இறங்கியிருக்கும்.

சின்னத்துரைக்கும் அவர் தங்கைக்கும் உயர்தர நவீன சிகிச்சையை அரசே அளிக்கவேண்டும். மேலும் அவர்களின் கல்விக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த பகுதியின் அத்தியாவசிய தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வழிவகை செய்யவேண்டும். கோயில் திருவிழாக்களில் பெருந்தெரு மக்கள் கலந்துகொள்ளுமாறு அரசு ஆவண செய்யவேண்டும். ஜாதிவெறி மாணவர்கள் ஒரு தேர்ந்த கூலிப்படை போல 2 அடி அரிவாளால் அந்த பிஞ்சுகள் மேல் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதலை பார்த்த அதிர்ச்சியில் 55 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். அந்த குடும்பம் தற்போது குடும்பத்தலைவரை இழந்துள்ளது.


அவர்களுக்கு உரிய இழப்பீடும். பட்டதாரி மகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இந்த விபரீதத்தை ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளும் தமிழ்நாடு அரசு பெருந்தெரு மக்களின் பிரச்சனைகளை களைந்து சமத்துவத்தை நிச்சயம் நிலைநாட்டும் என நம்புவோம்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்