இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்றவே தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் தமிழக எம்.பியுமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய அவர், இம்மசோதா இசுலாமியர்களுக்கு, தமிழர்களுக்கும் எதிரானது என்றும், நீதித்துறையை கையில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக குற்றம் சாட்டினார்.
“இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு கடுமையான எதிர்ப்பு, வெகுமக்களின் போராட்டமாக மாறியுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறையை ஏவி வருகிறார்கள்” என்று கூறினார்.
அதேபோல, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “செக்குலரிசம் (Secularism) என்பது மதச்சார்பின்மையை மட்டுமல்ல மொழிச்சார்பின்மையும் இனச்சார்பின்மையும் குறிக்கிறது. சார்பின்மை என்பது தான் செக்குலரிசம்” என்றும் தெரிவித்துள்ளார்.