
மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 1-ம் தேதி கடிதம் எழுதினார். புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது. குப்பை போடுவதை குற்றம் என்று அறிவித்து குறைந்தபட்சம் 1000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் கண்காணிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் வழங்கியிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது மாமல்லபுரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட விவரங்களை ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கு அரசு சார்பில் அவகாசம் கோரிய நிலையில், வரும் ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், தவறினால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.