Categories: அரசியல்

புதிய கொள்கை திட்டம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட கூடாது!

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது.

புதிய கொள்கை திட்டம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட கூடாது! 1
ராமதாஸ்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன் கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பது தான் அதுவாகும்.

மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது ஆகும்.

இந்தியக் கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுனர் குழு கடந்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி வரைவுக் கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அவர்களிடம் தாக்கல் செய்தது. 

அன்றே அந்த அறிக்கை பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரைவுக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால், அதற்கு கடும் எதிர்ப்பு  எழுந்தது.

வரைவுக்கொள்கை பற்றி கருத்து மற்றும் யோசனைகளை தெரிவிக்க ஜூன் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படிருந்த நிலையில், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று முதலில் ஜூலை 31-ஆம் தேதி வரையும், பின் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்த அவகாசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன. அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலனை  செய்ததா? அவற்றின் அடிப்படையில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டனவா? என்பது தெரியவில்லை.

வரைவுக் கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள யோசனைகளில் எவ்வளவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது? மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும்.

அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்