தீபிகா படுகோனுக்கு எதிரான ஜே.என்.யூ துணைவேந்தர் ஜகதேஷ் குமாரின் கருத்துக்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் விமர்ச்சித்துள்ளார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் முகமூடி அணிந்த குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவருடைய இந்த செயலினால் பாஜக அரசு அதிருப்தி அடைந்தது. இதனால் அவருடைய “சபாக்” திரைப்படத்திற்கு வலதுசாரிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
இதனை தொடர்ந்து நேற்று, மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்ட நடத்தினர். அப்போது பேசிய கன்னையா குமார், “ஒரு பாலிவுட் நடிகை பல்கலைக்கழகத்திற்கு வந்தார். மாணவர்களை சந்தித்தார். ஆனால் அவர் மோடிக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிராகவும் எதுவும் பேசவில்லை. அவருடைய மகன் எப்படி பி.சி.சி.ஐ செயலாளரான என்பதை பற்றியும் அவர் பேசவில்லை. ஆனால் அவருடைய படத்திற்கு ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை யோசிக்கிறேன்.

அவர் எந்த முழக்கமும் எழுப்பாத போது, எந்த கட்சியையும் விமர்சிக்காத போதும், ஏன் அவருடைய அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? இதன் பொருள் பல்கலைக்கழக தாக்குதலுக்கு அவர்கள் தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வதாகும்! என்றார்.
தீபிகாவின் வருகையை பற்றி கருத்து தெரிவித்த ஜே.என்.யூ துணைவேந்தர் ஜகதேஷ் குமார் “கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள் பறிபோயுள்ளது. அவர்கள் பக்கம் ஏன் இவர்கள் நிற்பதில்லை” என்று கூறினார்.
இதனை சுட்டிக்காட்டி பேசிய கன்னையா குமார், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசுவது துணை வேந்தரின் பொறுப்பு. நம்முடைய துணைவேந்தர் தீபிகா அல்ல அவர் தான் என்பதை அவருக்கு யாரவது நினைவுப்படுத்துங்கள்” என விமர்சித்துள்ளார்.