இயக்குனர் திருமுருகன் இயக்கி வரும் புதிய தொடர் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அவர் சன் டிவியில் இருந்து விலகி போட்டி சேனல் ஒன்றுக்கு செல்கிறார் என்றும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. 1999ம் ஆண்டு வெளியான அக்ஷயா என்கிற சீரியல் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் திருமுருகன். பின்னர் இவர் 2002 முதல் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற குடும்ப்பாங்கான தொடரை எடுத்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். இந்த தொடர் 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. பின்னர் 2010ம் ஆண்டு ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த இரண்டு நாடகத்திலும் இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனால் மக்களுக்கு இவர் கோபியாகவே பார்த்து வருகின்றனர்.

சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார் திருமுருகன். பரத்தை வைத்து இவர் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். முதல் படம் எம்டன் மகன். இரண்டாவது படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. இதில் எம்டன் மகன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை இந்த படத்தின் காமெடிகள் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எனவே மீண்டும் சீரியல் பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார் திருமுருகன். கடைசியாக கல்யாண வீடு என்ற தொடரை இயக்கி இருந்தார். பின்னர் சில காலம் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
சில நாட்களாக திரைத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற கோபி, தற்போது மீண்டும் ஒரு சீரியலை இயக்கி வருகிறார். இவரது சீரியல் குறித்த சில தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் எடுத்த சீரியல்கள் அனைத்துமே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது இந்த புது சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருமுருகன் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் அவர் இயக்கி வரும் புதிய தொடர் எந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை அவரே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.