
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தனது ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ‘7-ல் இருந்து 70’ வரை எனும் தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், சமூக சேவகர்கள் பாலம் கல்யாணசுந்தரம், ஓடந்துறை சண்முகம், 2 ரூபாய் டாக்டர் ஹரிஹரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 7 மாத கர்ப்பிணி ஒருவருக்கு சீமந்தம் செய்யப்பட்டது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு முன்கூட்டியே தங்க மோதிரம்-காப்பு வழங்கினர். இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தைக்கு பரிதா என பெயர் சூட்டப்பட்டது.
செல்வா எனும் மாணவனுக்கு பள்ளி கல்விக்கான உதவித் தொகை, ஸ்வேதா என்ற மாணவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவச பட்டப்படிப்புக்கான ஆணையும், பிரதீப் எனும் பட்டதாரிக்கு அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆணையும் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு கிறிஸ்தவ ஜோடிக்கு நிச்சயதார்த்தம், இந்து ஜோடிக்கு திருமணம் மற்றும் இன்னொரு தம்பதியினருக்கு 60-ம் கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
பின்னர் 70 கிலோ ‘கேக்’ வெட்டி, 5 ஆயிரம் வண்ண பலூன்கள் பறக்க விட்டு கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து 200 பெண்களுக்கு 3 சக்கர தள்ளுவண்டி, சேலை, இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு காலை-மதிய உணவும் வழங்கப்பட்டது.