தேவைப்படும் வளர்ச்சியை அதிகரிக்க, பரந்த அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என அமெரிக்க பொருளாதார வல்லுனரான நவ்ரியல் ரெளபினி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், சீர்திருத்தம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதலீடுகளை அதிகரிக்கவும், கிராமப்புற மக்களின் நுகர்வு தன்மையை அதிகரிக்கவும், கடன் வழங்கும் விதத்தை அதிகரிக்கவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்தும், மோடி அரசின் பொருளாதார கொள்கை பற்றியும் பிரபல அமெரிக்க பொருளாதார வல்லுனரான நவ்ரியல் ரெளபினி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவில் மிக முக்கியமான விஷயம் நிதிக் கொள்கை அல்லது நிதியியல் கூட அல்ல. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஐந்து முறை ரெப்போ வீதங்களைக் குறைத்துள்ளது. ஆனால் யதார்த்த நிலைக்கு, இந்த நிதிக் கொள்கையை கடத்துவது பலவீனமாக உள்ளது. தேவைப்படும் வளர்ச்சியை அதிகரிக்க, பரந்த அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை” என்றார்.
மேலும் கூறுகையில், “உங்கள் ‘வலுவான பிரதமர்’, நிஜமான பொருளாதார பிரச்சினைகளில் இருந்து தனது பார்வையை விலக்கிவிட்டார். குறுகிய காலத்தில் அவரை பிரபலப்படுத்தக்கூடிய அரசியல் விஷயங்களுக்கான திட்டங்கள்தான், பொருளாதார கொள்கைகளில் இடம் பிடிக்கின்றன. இது பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது.
கடன் அமைப்பு மற்றும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தம், நில சீர்திருத்தம், புதுமை, விவசாய நிர்ணயங்கள், தொழிலாளர்களின் வருமானம், உள்கட்டமைப்பு கொள்கைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியது முக்கியம். இது போன்ற விஷயங்களில் தான் பிரதமர் கவனம் செய்ய வேண்டும். இதனை தவிர குறுகிய கால புகழில் தன்னை பிரபலப்படுத்த நினைத்தால் மக்கள் அவற்றை மறந்துவிடுவர்” என்று கூறினார்.
2008ம் ஆண்டு, உலகமெங்கும், பொருளாதார பெருமந்தம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறியது நவ்ரியல் ரௌபினி என்பது கவனிக்கத்தக்கது.