Categories: சமூகம்

12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வெளியிட்டது
12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! 1

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இன்று (டிச.2) வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாகி உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. பதிவான விவரங்களின் அடிப்படையில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ. மழையும், குன்னூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளன.இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது. மேலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கும் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், டிச.3, 4 ஆகிய தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். கனமழையை பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

டிச.3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீச வாய்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மீனவர்கள் இந்த பகுதியில் அடுத்து வரும் இரு தினனங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை அக்.1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 40 செ.மீ. வரை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 36 செ.மி. இது இயல்பை விட 11 சதவீதம் அதிகம். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்