
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கணினி அறிவியல் படித்து கொண்டிருந்தார் அபிஷேக் சுதேஷ் பட் (வயது 25). இவர் உணவு விடுதி ஒன்றிலும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில், உணவு விடுதியில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பட் உடல் கிடந்திருந்தது. அடுத்த ஷிப்டுக்கு பணிக்கு வந்த நபர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அபிஷேக்கின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
இச்சம்பவம் காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நடந்திருக்கும் என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடத்த காலதாமதம் ஏற்படும் என்பதனால் இறுதி சடங்குகளை கலிபோர்னியாவில் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளார்கள். இவர் இறப்பு குறித்து அங்குள்ள போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.