
இந்திய அரசு , மக்களின் வறுமையை ஒழிப்பதில் சிறப்பாக முன்னேறி வருகிறது என்று , ஐ.நா., ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட, இந்திய பிரதிநிதி, ஷோகோ நோடா பேசுகையில்: நடப்பாண்டில், 189 நாடுகளில், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னர், மனித வள மேம்பாட்டு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியா, 129வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. கடந்த ஆண்டு, இந்தியா, 130வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 30 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது.
அதாவது, மக்களின் வறுமை நிலை வெகுவாக குறைந்து வருகிறது. அத்துடன், மக்களின் சராசரி வாழ்நாள் நீடித்துள்ளது. கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆரோக்கிய பராமரிப்பு வசதி பரவலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், 2005–16ம் நிதியாண்டுகள் வரை, 27.10 கோடி பேர், வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
‘பிரதமரின் அனைவருக்கும் வங்கிச் சேவை’, ‘ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு’ போன்ற பல திட்டங்கள், மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த துணைபுரிகின்றன. இது,’அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற பிரதமரின் தாரக மந்திரத்திற்கு வலுசேர்ப்பதாக உள்ளது.இந்தியா, மனித வள மேம்பாட்டு குறியீட்டில், 50 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது, நடுத்தர மனித வள மேம்பாட்டு குழுவை விடவும், இதர தெற்காசிய நாடுகளின் சராசரி வளர்ச்சியை விடவும் அதிகம்.
மனித வளத்தை மேம்படுத்துவதில், வேறு, எந்த பிராந்தியத்திலும், இத்தகைய வேகமான வளர்ச்சி காணப்படவில்லை.கடந்த, 1990-2018 வரை, தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி 46 சதவீதம் உயர்ந்துள்ளது. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் வளர்ச்சி, 43 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.