இயக்குனர் மணிரத்னத்தால் தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் அரவிந்தசாமி .தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் நாயகனாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அரவிந்த்சாமி தற்போது வில்லன், ஹீரோ என்று எல்லா கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார். கடைசியாக இவர் தலைவி திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கொஞ்சம் மாறுபட்ட கதாபாத்திரங்களையே தெரிந்து எடுத்து நடித்து வருகிறார் இவர். அதில் அரவிந்த்சாமியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் கள்ளபார்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை ராஜபாண்டி இயக்கியுள்ளார்.
திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார். வீல் சேரில் அமர்ந்தபடி ஒரு வீட்டில் நடக்கும் மர்மத்தை அரவிந்த்சாமி கண்டு பிடிப்பது போன்று காட்டப்பட்டிருக்கும் இந்த டீசர் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் டீசரில் வரும் காட்சிகளும், பின்னணி இசையும் பயங்கர திகிலாக இருக்கிறது. இதைப் பார்க்கும்போது படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் இருக்கும் என்று தெரிகிறது. அதிலும் ரத்தம் தெறிக்க வைக்கும் கொலை மற்றும் ஆக்சன் காட்சிகள் படு மிரட்டலாக இருக்கிறது.
இப்படம் உருவாகி நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் பிரச்சனையில் சிக்கி கிடப்பில் போடப்பட்டிருந்தது. நீண்ட இழுபறிக்கு இடையில் தற்போது ஜூன் 24 அன்று உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அரவிந்த்சாமி நடித்த சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் சிக்கலில் இருக்கிறது. அதனால் அவர் இந்த திரைப்படத்தை தற்போது முற்றிலுமாக நம்பியிருக்கிறார். சமீபகாலமாக த்ரில்லர் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா பாண்டி என்பவர் இயக்கத்தில், கோடியில் ஒருவன் இசை அமைப்பாளர் நிவாஸ்.கே.பிரசன்னா இசையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Video Courtesy – ThinkMusicIndia