சின்னத்திரை நடிகை அபிநவ்யா தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்து இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்கிற தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தவர் அபிநவ்யா. செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சீரியல்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். தற்போது இவர் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர் நடித்து வரும் கயல் சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கும் அபிநவ்யாவுக்கும் சீரியல் நடிகர் தீபக்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

தீபக்கும் அபியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தீபக் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் என்றென்றும் புன்னகை என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது அவர் ஈரமான ரோஜாவே சீசன் 2 விலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அபி கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருந்தார். தீபக்கும் அபியும் சேர்ந்து மெட்டர்னிட்டி புகைப்படத்தை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தனர். கர்ப்பமாக இருந்ததால் கயல் சீரியலை விட்டு விலகி இருந்தார் அபிநவ்யா.
இந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்கள், “கடவுள் நம்மீது பொழிந்த கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற ஒரு பரிசை தந்தார். என்னுடைய குழந்தை. செவிலியரால் என் கைகளில் வைக்கப்பட்டபோது, நான் உயிருடன் மற்றும் உற்சாகமாக உணர்ந்தேன், அது ஒரு ஆண் குழந்தை. உங்களின் அனைவரின் ஆசிகளும் பிரார்த்தனையும் வேண்டும் என்று அபியின் கணவர் தீபக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கயல் சீரியல் நடிகை சைத்ராவும் தனது வாழ்த்தை கூறி இருக்கிறார்.