நடிகை குஷ்பூ தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில்” இது போன்ற சேரி பாஷைகளை நான் பேசமாட்டேன், ஆனால் திமுக குண்டர்கள் இப்படித்தான் பேசுவார்கள்” என்று பதிவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேரி என்கிற வார்த்தையை சமூகத்தில் இருந்து அகற்ற பல தலைவர்களும் பாடு பட்டு வரும் நிலையில் அடித்தட்டு மக்களை இழிவுபடுத்தி விட்டதாக குஷ்பூவுக்கு கண்டனங்களும் எழுந்து வருகிறது. சமீபகாலமாக திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதில், “‘லியோ’ படத்தில் திரிஷாவுடன் நடிக்கிறேன் என்றதும் நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் தூக்கிப் போடலாம் என்று நினைத்தேன்” என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அவரின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் வைரலானது. இதற்கு நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் குஷ்பூ, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து த்ரிஷா குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க விட்டால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கும் முடிவை எடுக்க வேண்டி வரும் என்று சொல்லி தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத் தலைவர் என்ற முறையில் மன்சூர் அலிகான் மீது சில நடவடிக்கைகளும் எடுத்து இருந்தார். மன்சூர் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் விஷயத்தில் கொதிக்காத குஷ்பூ இதற்காக ஏன் கொதிக்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பினர். அதில் திமுக பிரமுகர் ஒருவர் காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுருந்தார். அதை மறுபகிர்வு செய்த குஷ்பூ, “இதைத்தான் திமுக குண்டர்கள் செய்கிறார்கள். தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெண்ணை அவமதிக்கதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மன்னிக்கவும், உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது.
நீங்கள் விழித்தெழுந்து என்ன பேசப்பட்டது மற்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும், உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். முக ஸ்டாலின் அவர்களே உங்களை அழிக்க இது போன்ற முட்டாள்கள் கூட்டம் நிறைய இருக்கிறது ஜாக்கிரதை” என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பூ பயன்படுத்திய “சேரி” என்ற வார்த்தை இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்புயுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை காயப்படுத்தும் அந்த வார்த்தையை சமூகத்தில் இருந்து அகற்ற நூறாண்டு காலமாக தலைவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தில் இருக்கும், கட்சியில் பணியாற்றி வரும், தேசிய மகளிர் ஆணையத் தலைவராக இருக்கும் குஷ்பூ, பொறுப்பை உணராமல் பேசியிருப்பது கண்டங்களை பெற்று வருகிறது.
Twitter Original Source From: Khushubu Sundar