தமிழகத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலம். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதில் குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை, இரு தரப்பினரையும் அழைத்து வைத்து நீதிமன்றம் போல் விசாரித்து அதற்கான தற்காலிக தீர்வுகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். இதனால் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும், நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் விவாதிக்க நீதிமன்றங்கள் இருக்கும்போது, ஒரு தொலைக்காட்சியில் வைத்து குடும்பங்களை இப்படிதான் செய்வீர்களா? என்று இவரை பலரும் திட்டி தீர்த்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சொல்வதெல்லாம் உண்மையை நடத்திக் கொண்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பின்னர் நீதிமன்றம் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று தடை விதித்த பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

மேலும் இவர் தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் என்ற நான்கு படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது சமுத்திர கனியை ஹீரோவாகவும், மிஷ்கினை வில்லனாகவும் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் இசையை அமைப்பதற்காக இளையராஜாவை நாடி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இளையராஜா வீட்டிற்கு சென்ற அவரை, இளையராஜா தரையில் அமர வைத்திருந்தார். இளையராஜா ஒரு கட்டிலின் மேல் ஹார்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருக்க லட்சுமி ராமகிருஷ்ணனும் அவருடன் சென்றவரும் தரையில் அமர்ந்திருந்தனர். இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் இளையராஜாவையும் லட்சுமி ராமகிருஷ்ணனையும் திட்டி தீர்த்து வந்தனர். இளையராஜாவிற்கு ஒரே சேர் கூட வாங்க முடியவில்லையா? என்றும், மற்றவர்களை தனக்கு இணையாக உட்கார வைத்தால் இளையராஜா குறைந்து போய்விடுவாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் அளித்திருக்கிறார்.
தனது திறமையால் உயர்ந்தவர், மூத்தவர், ராஜா சார் கடவுளுக்கு நிகரானவர், அவரது காலடியில் அமர முடிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய இடத்திற்குச் செல்லும்போது அதையே செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் தரையில் அமர்வது ஆரோக்கியத்திற்கு நல்லது நண்பரே, 76வது சுதந்திர நாள் வாழ்த்துக்கள். என்று விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.