
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், பிலாவிடுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (29) – மாதவி (24) ஆகியோருக்கு திருமண விழா நடைபெற்ற போது இருதரப்பினரின் உறவினர்களும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தனர். ராமச்சந்திரனனின் உறவினராக ராமராஜனும் (30), மாதவியின் உறவினராகத் தேவியும் (27) கலந்துகொண்டனர். ராமராஜன் மற்றும் தேவி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். திருமணம் முடிந்த பின்பு இரு குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் ராமராஜனும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்க்க நேரிடுகிறது. இருவரும் தங்களது சைகை மொழியில் முதலில் ஒருவரை, ஒருவர் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். தொடர்ந்து, இருவரும் நீண்ட நேரமாக உரையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, உடனே பெற்றோர்களிடம் கூற, பெற்றோர்கள் இருவீட்டாரும் இணைந்து பேசி நிச்சயம் செய்து கையோடு உடனே திருமணத்தையும் செய்து வைத்துள்ளனர். காலையில் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், மாலையில் இருவரையும் திருமணப் பந்தத்தில் இணைத்தது.