
மலையாளத்தில் அறிமுகமான நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
மலையாளத்தில் முன்னணி நடிகை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார், இப்போது ஜாமீனில் வந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவில் தொடர்ந்து தனது நடிப்பை தொடர்கிறார். அசுரன் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி உள்ளார்.
இதனிடையே, மலையாள தொலைக்காட்சிக்கு திலீப் அளித்த பேட்டியில் கூறுகையில், “நடிகை கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய விவரங்களை வெளியிட உள்ளேன். ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க போவதில்லை. என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சுவாரியர் மீது எனக்கு கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் எனக்கு தயக்கம் இல்லை.
காலமும், கதையும் சரியாக அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன். மலையாளத்தில் எனக்கு எதிராக உருவாக்கப்பட்ட மலையாள திரையுலக பெண்கள் கூட்டமைப்பினர் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்களும் எனது சகாக்கள்தான். மலையாள பட உலகில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.” இவ்வாறு திலீப் கூறினார்.