கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிக பெரிய வெற்றியையும் நயன்தாராவிற்கு மக்களிடையே பெரிய அறிமுகத்தை கொடுத்து.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என் மூன்று மொழிகளிலும் பெரிய முக்கிய நாயகர்களுடன் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். நடுவில் சிம்புவுடன் காதல், பின் பிரபுதேவாவுடன் லிவிங் டுகெதர் என இருந்து பட வாய்ப்புகள் குறைந்து, திடீரென படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

பின்னர் வெளியான ராஜா ராணி படம் இவருக்கு மிக பெரிய கம்பேக்காக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக கோலமாவு கோகிலா, விசுவாசம், பீகில், அண்ணாத்தே என மீண்டும் வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக விக்னேஷ் சிவன், இவரது 2வது திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இதன் பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், அடிக்கடி கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது, இதுதான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண அழைப்பிதழ் என ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதன் படி, சென்னை மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலில், திருப்பதியில் திருமணம் வைக்க முடிவு செய்து தற்போது மஹாபலிபுரம் மாற்றியதன் காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் 9ம் தேதி திருமணம் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அனுமதி கோரி இருந்தனர்.
அதே போல நடிகர் நடிகைகள் தங்களுடைய திருமண நிகழ்வை பதிவு செய்து அதை தனியார் OTT நிறுவங்களிடம் விற்று பணம் பார்த்து வருகினறனர். அண்மையில் திருமணம் முடித்த கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோரின் திருமண பதிவை வாங்க தனியார் நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட 80 கோடி ருபாய் பேசி வாங்கி உள்ளது. அதே போல ரன்பிர் கபூர் அலியா பட் திருமணமும் 80 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. அந்த ஃபார்முலாவை பின்பற்றி இப்பொது இங்கு நயன்தாராவும் வியபாரம் செய்ய போவதாக தகவல். அதற்கு திருப்பதி தேவஸ்தான போர்டு இங்கு நிறைய கேமெராக்கள் எல்லாம் வேண்டாம் என கூறி ஒத்திவைத்துள்ளனர்.
இதன் காரணமாக, அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது திருமணம் நடைபெறும் இடத்தை மாற்றி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரை உலக பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.