குறைந்தபட்ச வேலைவாய்ப்பு கோரிக்கையை ஏற்றும் கொள்ளும் கட்சிகே தங்களது ஆதரவு என ஜனநாயக் ஜந்தா தளம் தலைவர் துஷ்யந்த் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை இல்லாமல் போய் விட்டது.
பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், புதிய மாநில கட்சியான ஜன்னாயக் ஜந்தா கட்சி 10 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும், ஹரியானா ஜனதா கட்சி மற்றும் தேசிய லோக் தளம் ஆகியவை தாலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஹரியானா ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏகளில் ஒருவரும் தற்போது பாஜகவை ஆதரித்துள்ளனர். இதனால் பாஜகவின் பலம் 42ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஜனநாயக் ஜந்தா கட்சியின் பக்கம் தான் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பதில் கூறிய துஷ்யந்த், “நாங்கள் இதுகுறித்து விவாதித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை தெரியப்படுத்துகிறோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “பாஜகவோ அல்லது காங்கிரஸோ எங்களுக்கு தீண்டத்தகாதவர்கள் கிடையாது. குறைந்தபட்ச வேலைவாய்ப்பினை உறுதி செய்வதே என் நோக்கம். அதனை ஆதரிக்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு. இந்த முடிவிற்கு வெற்றி பெற்றுள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் தேசிய லோக் தளம் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் புதிய கட்சியை துவங்கினார் துஷ்யந்த். கட்சி ஆரம்பித்த 11 மாதங்களிலே இத்தகைய எழுச்சியை ஜனநாயக் ஜந்தா தளம் பெற்றிருக்கிறது.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் அஜய் சிங், இன்னொருவர் அபய் சிங். அபய் சிங் தற்போது தேசிய லோக் தளம் கட்சியின் தலைவராக உள்ளார். அஜய் சிங்கின் முதல் மகன் தான் புதிய அரசியல் எழுச்சியாக கருதப்படும் துஷ்யந்த் என்பது கூடுதல் தகவல்.