இயக்குனர் பா ரஞ்சித் இளையராஜா குறித்து ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதில் அவர், இளையராஜாவை தினமும் ரசிக்கிறேன். ஆனால் அவரிடம் நெருங்கி செல்ல தயக்கமாக இருப்பதாக கூறியிருக்கிறார். தமிழில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா ரஞ்சித். இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் கடைசியாக இயக்கி வெற்றிகரமாக ஓடிய படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா துஷாரா விஜயன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். தற்போது இவர் இயக்கி வரும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் நேற்று தான் வெளியாகி இருந்தது. பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அவருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இசையமைப்பாளர் தென்மாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பா ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டகத்தி இந்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் மூலம்தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இருவருமே இரண்டு துறைகளிலும் புதியவராக இருந்த போதிலும் பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி காலா, சர்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்திருந்தார். ஐந்து படங்களுக்கும் தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. ஆனால் என்ஜாயி எஞ்சாமி பாடலில் தெருக்குரல் அறிவு பிரச்சனையில் அவருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் அவர் தற்போது இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை படத்தில் இணைத்து இருந்தார்.
இதுகுறித்து பா ரஞ்சித்திடம் கேட்டபோது நான் அவரை வேண்டுமென்றே விலக்கவில்லை, இன்னொரு புதிய இசையமைப்பாளர் உடன் இணைந்து பயணித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் இந்த படத்திற்கு தென்மாவை நியமித்ததாக கூறினார். மேலும் நீங்கள் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து பேச அவர் நான் அவரை தூரத்தில் நின்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று இன்றுவரை நான் நினைத்ததில்லை, அவர் அருகில் நெருங்கவே தயக்கமாக இருக்கிறது. அவர் பெரிய மேதை. அவர் இல்லை என்றால் நான் இந்த துறைக்கே வந்திருக்க மாட்டேன். அவருடைய சினிமா பாடல்கள் எனக்கு தன்னம்பிக்கை பாடல்கள் ஆக இருந்திருக்கிறது. அவரை தினம் தினம் ரசிக்கிறேன், ஆனால் அவரை நெருங்கி செல்ல தயக்கமாக இருக்கிறது என்றும் பா ரஞ்சித் மனம் திறந்து பேசி இருக்கிறார்.