நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒப்பிலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தாதா பற்றிய கதையான கன்னட திரைப்படமான “முப்டி” என்கிற படத்தை ரீமேக் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். வெளியான முதல் காட்சிகளிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் திரை விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றின் தொழில் அதிபராக ஏ ஜி ஆர் என்ற தாதாவாக இருக்கிறார் சிம்பு. தமிழகத்தை எந்த கட்சி ஆள வேண்டும், யார் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை ஏஜிஆர் தான் தீர்மானிக்கிறார். அந்த அளவிற்கு அரசியலில் செல்வாக்கு படைத்தவராக இருக்கிறார் ஏஜிஆர்.

இப்படி ஒரு புறம் நிலைமை இருக்க, முதலமைச்சர் ஆக இருக்கும் சந்தோஷ் பிரதாப் திடீரென ஒரு நாள் கடத்தப்பட்டு விடுகிறார். இந்த நிலையில் சிம்புவை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் அண்டர் கவர் போலீஸான கௌதம் கார்த்திக் அடியாள் போன்ற வேடத்தில் சிம்புவிடம் அடியாளாக வேலைக்கு செல்கிறார். அதன் பின்பு என்ன நடந்தது? கௌதம் கார்த்திக் சிம்புவை பிடித்தாரா? காணாமல் போன முதலமைச்சர் என்ன ஆனார்? சிம்புவின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. பத்து தல என்று படத்தின் தலைப்பை வைத்துவிட்டு, சிம்புவை முதல் பாகத்தில் காட்டாமலேயே விட்டு இருக்கின்றனர். தூரத்தில் இருந்து அவரைக் காட்டுவது, அவருடைய கை கால்களை மட்டும் காட்டுவது என்று சிம்புவின் தோற்றமே இல்லாமல் முதல் பாதி முழுவதும் நகர்கிறது. கௌதம் கார்த்திக் மட்டுமே முதல் பாதியில் வந்து கொண்டிருக்கிறார். எனவே இந்த படத்தின முதல் பாதியை பார்க்கும்போது, இது சிம்பு படமா? இல்லை கௌதம் கார்த்திக் படமா என்கிற கேள்வி எழுகிறது.
இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் சிம்பு தோன்றுகிறார். இது சிம்பு ரசிகர்களுக்கு சில இடங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் இரண்டாம் பாகத்தில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு தனது செல்வாக்கை இரண்டாம் பாகம் முழுவதிலும் நிரூபித்து காட்டியிருக்கிறார். தனி ஒரு ஆளாக நின்று படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் சிம்பு. ஆனால் சிம்பு யார் என்று நமக்குத் தெரிய வரும் பொழுது அவர் மீது அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் இயக்குனர் அதை அழுத்தமாக செய்ய தவறி இருக்கிறார். அண்டர் கவர் போலீசாக கௌதம் கார்த்திக் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு படத்தில் பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. சில காட்சிகளில் அவ்வப்போது மட்டுமே வந்து சென்று கொண்டிருக்கிறார். சிம்புவே வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றி இருப்பதால் துணை முதலமைச்சர் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் வந்த கௌதம் மேனனுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாமல் போனது. அவர் துணை வில்லன் போல நடுவில் வந்து சில வில்லத்தனங்களை செய்து கொண்டிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் மனதில் பதியவில்லை. ஆர்யாவின் மனைவி சாயிஷா ஆடி இருந்த ராவடி பாடல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
திரைக்கதை பெரிய அளவில் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. கிளைமேக்ஸ் காட்சிகளில் 100 பேர் துப்பாக்கியுடன் வந்து சுட்ட போதிலும் தனி ஒரு ஆளாக நின்று ஒரு துப்பாக்கி வைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் சிம்பு. இது போன்று இன்னும் எத்தனை படங்களில் தான் காட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. இங்கு எல்லாம் மிகப்பெரிய லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவே தெரிகிறது. ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. பாடல்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பல இடங்களில் ஏ.ஆர்.ரகுமானின் பிஜிஎம் ஆங்காங்கே தூக்கி நிறுத்தி இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது. பத்து தல என்று சொல்லிவிட்டு ஒத்த ஆளாக நின்று படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் சிம்பு. அதுவும் பாதி படத்திற்கு மேல் வந்ததால் இது பாதி தலையாக மாறிவிட்டது. இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.0/5
Youtube Video Embed Code Credits: Sony Music South