
இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டிக்கு தனுசின் வடசென்னை அல்லது பார்த்திபனின் ஒத்த செருப்பு தேர்வாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ரன்வீர் சிங் நடித்த கல்லிபாயை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
இது மட்டுமல்லாமல் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழாவில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட இந்தி திரையுலகினரை அழைத்து இருந்தனர்.
இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மகாத்மா காந்தி பற்றிய குறும்படத்தை வெளியிட்டார். பின்னர் இந்தி நடிகர் நடிகைகளுடன் கலந்துரையாடி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார் மோடி. மேலும் நடிகைகள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ட்விட்டரில் திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என்று மோடி குறிப்பிட்டு இருந்தார்.
இதனை பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசன விமர்சித்து வந்தார். அவர் கூறும்போது, “இந்தி நடிகர்களுக்கே மத்திய அரசு பிரதிநிதித்துவம் அளிக்கிறது. தென்னிந்திய சினிமாவை புறக்கணிப்பதாக உணர்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை குஷ்புவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “பிரதமரை சந்தித்த கலைஞர்களை மதிக்கிறேன்.
இந்தி திரையுலகம் மட்டும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவில்லை. தென்னிந்திய சினிமாவும் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். திறமையான நடிகர்கள், சூப்பர் ஸ்டார்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் தென்னிந்தியாவில் இருந்து அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவில்லை. எதற்காக இந்த பாகுபாடு காட்ட வேண்டும்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.